டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால் திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவுக்கு உள்ளதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளர்.
திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்
தவெக தலைவர் X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த கைதேர்ந்த நுட்பான முறையில் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடத்த முடியும். திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவுக்கு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பேசும் இந்த திமுக அரசு மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையும் செய்கிறது.
சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்
அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் இந்த டாஸ்மார்க் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் ஆவேசமாக கூறியுள்ளார்.