சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து எழும்பூரில் உள்ள தலைமை அலுவகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழசை செளந்தரராஜன், கைது செய்யப்பட்டார். இதேபோல் பாஜக வினோஜ் பி செல்வத்தையும் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற தமிழசை, வினோஜ் செல்வத்தை கைது செய்து திமுக அரசு வீட்டு காவலில் வைத்துள்ளது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது. தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.